ஞாயிறு, 2 அக்டோபர், 2022

ஆண்டாளாய் என் மனது...

விலகாத விழிகொண்டு
உன்னுள் விழுந்திடச் செய்தவனே.
பார்வை ஸ்பரிசத்தால் என் மனதில்
உன் நினைவை கருக்கொள்ள செய்தவனே.


கட்டுக்கடங்காமல்
கொழுந்து விட்டு எரியும் உன்
காம வேள்விக்கு எனை அவிப்பொருளாய்
கொண்டவனே.


மார்கழி மாதத்தில்
மனங்குளிரும் நேரத்தில்
மயக்கங்கள் கொண்டே, கவி
புலம்பச்செய்தவனே.


மன்னவனே! நான்
சூடாத மாலைகளை
சூடுவதே இல்லையென
சூட்சமமாய் சொன்னபின்பு
சூடிக்கொண்டேன் உன்னையே
என் மனதோடு.

மயிலிறகு ஒன்று
மகுடமாய் கொண்டு
வேய்குழலால் எனை வென்று
மனதோடு நின்றாய் மாயவனே.

வீசும் காற்றில் குழல் ஊதிய உன்
சுவாசக்காற்றும் இருக்குமென என்
சிந்தையில் வைத்து
கரைந்து கொண்டே இருக்கிறேன் நான்.
நீ விரும்பும் பச்சை கற்பூரமாய்
நான் உன்
ஆண்டாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தினம் தினம்

 தினம் தினம் உன் நினைவுகள் மலர்ந்திட கணம் தொரும் மணம் முகிழ்ந்திடும் நறு மலரென என் உடல் தனில் நீ கொடியென படர்ந்திட அனுதினம் நின்னணைப்பினில் ...