வெள்ளி, 24 மார்ச், 2023

தினம் தினம்

 தினம் தினம் உன் நினைவுகள்

மலர்ந்திட

கணம் தொரும் மணம் முகிழ்ந்திடும் நறு மலரென

என் உடல் தனில் நீ கொடியென படர்ந்திட

அனுதினம் நின்னணைப்பினில்

மனம் சுகம்பெற

அகக்கனல் வெகுண்டெழும்

அது அணைந்திட

அணைத்து நீ அகம் மகிழ்ந்திட

அருகினில் நீ வருவாயே.

ஞாயிறு, 2 அக்டோபர், 2022

வண்ணத்துப்பூச்சிக்காக

நீங்கள்
என்னை கவனிக்காமல் இருக்கலாம்
அல்லது 
கவனிக்காதது போல் நடிக்கலாம்
அல்லது 
கவனித்தும் அஃறிணை போல கருதி கடந்து போகலாம்
அல்லது
கவனித்து விட்டு ஒரு ஏளனப்புன்னகை புரியலாம்
அல்லது
கவனித்து விட்டு என்னிடம் முட்டாள் என கூறிவிட்டு கூட செல்லலாம்
ஆனாலும்
கட்டுக்கடங்காமல் வரும் கண்ணீரை
கட்டுபடுத்த முடியாமல் அழுகிறேன்.
சாலையில் நசுக்கி கொல்லப்பட்ட 
வண்ணத்துப்பூச்சிக்காக...

ஆண்டாளாய் என் மனது...

விலகாத விழிகொண்டு
உன்னுள் விழுந்திடச் செய்தவனே.
பார்வை ஸ்பரிசத்தால் என் மனதில்
உன் நினைவை கருக்கொள்ள செய்தவனே.


கட்டுக்கடங்காமல்
கொழுந்து விட்டு எரியும் உன்
காம வேள்விக்கு எனை அவிப்பொருளாய்
கொண்டவனே.


மார்கழி மாதத்தில்
மனங்குளிரும் நேரத்தில்
மயக்கங்கள் கொண்டே, கவி
புலம்பச்செய்தவனே.


மன்னவனே! நான்
சூடாத மாலைகளை
சூடுவதே இல்லையென
சூட்சமமாய் சொன்னபின்பு
சூடிக்கொண்டேன் உன்னையே
என் மனதோடு.

மயிலிறகு ஒன்று
மகுடமாய் கொண்டு
வேய்குழலால் எனை வென்று
மனதோடு நின்றாய் மாயவனே.

வீசும் காற்றில் குழல் ஊதிய உன்
சுவாசக்காற்றும் இருக்குமென என்
சிந்தையில் வைத்து
கரைந்து கொண்டே இருக்கிறேன் நான்.
நீ விரும்பும் பச்சை கற்பூரமாய்
நான் உன்
ஆண்டாள்.

காதலோடு கதைத்த பொழுதில்...

அவன்:

கார்முகில்
அருளும் முதல் துளியோ?
மழை புணர்ந்ததும்
மண் உமிழும் புது மணமோ?
வைகறை பூப்படைந்த
புதுமலரோ?
கவிதைக்குள் சூழ் கொண்ட
தமிழ் சுவையோ?
அவள் யாரோ? அது நீயோ?

அவள்:

என் துகிலினுள் நுழைந்து
தழுவும் மென்காற்றோ?
என் கனவுகள் களிகொள்ளும்
எண்ண வண்ணங்களோ?
என் கொலுசுக்குள் சிணுங்கும்
வெட்கச் சிம்பொனியொ?

அவன் யாரோ? அது நீயோ? 

எத்தனை காதல் கொண்டாயோ?

 மாலவன் விரல்தனை
பற்றி கொண்டே,
வேதங்கள் துலவும்
மூலவன் பாதம் பற்றி
மாலை கொண்டாயே
இமையவன் ஒரு பாகம் கொண்டாயே
உமையே
எத்தனை காதல் கொண்டாயோ?

அவன் கையிலும் தீ
மெய்யிலும் தீ
கண்ணிலும் தீ
சாரதி தங்கையே
தீயோருக்கெல்லாம்
தீ என்பதால்
திருமணம் கொண்டாயோ?
 உமையே
எத்தனை காதல் கொண்டாயோ?

ஞானம் அறியாதோர்
மட்டும்
அறிதலுக்குரிய
அரியவன்.
ஆயர்பாடி
அரி அவன் இளையோளே
திகழ் ஒளி சிதம்பரத்தான்
அகம் நுழைந்தாளே
உமையே
எத்தனை காதல் கொண்டாயோ?

மூவரில் மேலவன்
கங்கையோ
தலைமேலவன்.
மாயவன் சோதரி
மாயங்கள் செய்து
தூயவன் துணையானாயே
உமையே
எத்தனை காதல் கொண்டாயோ?

திடுக்கிடல்

நெஞ்சில் பயங்கொள்ள
செய்யும் இரவு !
புரியாத மௌனமும், இருளும்.
சில உறுமல் ,
சில பிளிறல் ,
சொல்லத்தெரியாத
வினோத சப்தங்கள்.
திடுக்கிட்ட என்னிடம் சொன்னாள்
"பயப்படாத! கல்யாண மண்டபம் அப்படிதான் இருக்கும்
தூங்கு, வெறும் குறட்டை சத்தம் தான் " - அம்மா .

அவள் கொஞ்சம் தேவதை

 


முகவரியாய்
உனைப்பற்றி
 ஒருவரியும் தெரியாது.
அரிபறியை எனை கடந்து போனாலும்
பிறை கொண்ட நிலவாய்
என் மனம் விட்டு மறையாது
உன் முகம்.
எது பற்றியும் அறியவில்லை
எது உறவானாலும்  பரவாயில்லை.
என் மனம் விட்டு ஒரு நொடியும்
நீ மட்டும் மறைவதில்லை.
கொஞ்சம் கொஞ்சமாய்
நெஞ்சம் புகுந்து
வஞ்சமே இல்லாமல் ஊடுருவிப் போனவள்
பஞ்சாய் பறக்கவைத்தாள்
நெஞ்சத்து நினைவுகளை !
பாரங்கல்லாய் அமர்ந்து போனாய்
கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்.
ஆம் அவள் கொஞ்சம் தேவதை தான்.
விழியோரத்து கண்ணீர் துளியுடன்
அவளுக்காய் பிரார்த்தனை மட்டும் நொடிக்கொருமுறை
மாறுமோ அவள் முகம்
இனி வாழ்விலே ஒரே ஒரு முறை !
அவள் கொஞ்சம் தேவதை....


[அழகான முகத்தில் பாதிக்கு மேல் தீயால் எரிந்து போன ஒரு தேவதை பெண்ணை பார்த்த பொது என்னுள் எழுந்த கவி]

தினம் தினம்

 தினம் தினம் உன் நினைவுகள் மலர்ந்திட கணம் தொரும் மணம் முகிழ்ந்திடும் நறு மலரென என் உடல் தனில் நீ கொடியென படர்ந்திட அனுதினம் நின்னணைப்பினில் ...